கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முஸ்லிம்களுக்கு வினோதம் காட்ட முனையும் மஹிந்த! (கடிதம்)

இந்த நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் விரும்பும் அனைவருடனும் இணைந்து நல்லாட்சி ஒன்றை கொண்டு செல்ல வேண்டிய அதிகாரமும், வல்லமையும் கொண்டிருந்த நல்ல சந்தர்ப்பங்களை எல்லாம் மண்ணாக்கி விட்டு இன்று எந்தவித அதிகாரமும், பலமும் இல்லாத நிலையிலும் கைநழுவிப்போன ஆட்சி அதிகாரங்களை மீண்டும் தன்வசப்படுத்திக் கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

இந்த வகையில் மஹிந்த முழு முஸ்லிம் சமூகத்தினையும் ஏமாற்றும் விதத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் சென்று தான் நல்லவன், யாருக்கும் வஞ்சகம் செய்ய வில்லை நான் நேர்மையானவன் என்ற விளையாட்டில் இறங்கியுள்ளமை பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் வேடிக்கையானதும், விநோதமானதுமான செயற்பாடுகளாகவே காணக் கூடியதாகவுள்ளது.

குறிப்பாக மஹிந்தவின் காலத்தில் இந்த நாட்டில் சிறுபான்மைக்குள் ஒரு சிறுபான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் முழு முஸ்லிம் சமுகத்திற்கும் இனவாதிகளால் சமய, சமுக ரீதியாகவும், பொருளாதார, அரசியல் ரீதியாகவும் சொல்லொனாத் துன்பங்களையும், துயரங்களையும் கொடுத்து இந்த நாட்டு முஸ்லிம் சமுகத்தின் வாழ்வியல்கள் சிதைக்கப்பட்டு வந்ததுடன் முஸ்லிம்களின் இயல்பு வாழ்க்கை ஒரு கட்டத்தில் கேள்விக் குறியாக இருந்த நிலைமையைக் கூட இந்த நாட்டு மக்கள் அனைவரும் நன்கறிவர். குறிப்பாக முஸ்லிம்களால் மேற்படி நிலைமைகளை இலகுவில் மறந்து விடவும் முடியாத ஒரு சம்பவங்களுமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் நடந்த சம்பவங்களை எல்லாம் தாராளமாகவே அறிந்திருந்தது மட்டுமல்லாது பல துன்பகரமான சம்பவங்களை நேரடியாக கண்ணால் கண்டு கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்த நாதியில்லாமல் மாற்றான்தாய் மனப்பான்மையில் இருந்து முழு முஸ்லிம் சமூகத்திற்கும் வஞ்சகம் செய்து விட்டு இன்று நீலிக் கண்ணீர் வடிப்பதும், தான் நல்லவன் என்ற வேடம் பூணுவதற்கு முயற்சிப்பதானது முழு முஸ்லிம் சமூகத்தினையும் மடயர்களாகவும், முட்டாள்களாக்கவும் நினைக்கும் வேடிக்கையான விடயங்களாகவே நோக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 20ம் திகதி மாவனல்லையில் முஸ்லிம் சமூகத்தினைச் சந்தித்து,  தனது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சம்பவங்களுக்கு தான் பொறுப்பு அல்ல என்றும் தன்னிடமிருந்து முஸ்லிம்களைப் பிரிப்பதற்கான சதியே என்றும் கூறியுள்ளமை இந்த நாட்டின் வரலாற்றைப் பொருத்த மட்டில் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற ஒரு விடயமாகவும், அப்பட்டமான பொய்யாகவுமே முஸ்லிம் சமுகம் நோக்குவதுடன் இச்செயற்பாடுகள் மூலம் மஹிந்த மீது மேலும் மேலும் வெறுப்புக்கள் ஏற்படுவதற்குமான நிலைமைகளை தோற்று வித்துள்ளது.

இந்த நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக புரையோடிப்போயிருந்த கொடிய யுத்தத்தை கடந்த 2009 இல் முடிவிற்கு கொண்டு வந்தார் என்ற ஒரே காரணத்திற்காகவே 2010ஆம் ஆண்டு மஹிந்தவை இந்த நாட்டு மக்கள் ஆட்சிப் பீடம் ஏற்றியதுடன் அவர் இந்த நாட்டில் சமாதானத்தையும் ஏற்படுத்துவார் என்று கனவு கண்டனர். மக்களின் கனவுகள் அனைத்தும் தலைகீழாகி இனவாதம் என்ற தீய சக்திகளின் கைகளில் நாட்டின் நீதித்துறையும், சட்டத்துறையும் தாண்டவமாடத் தொடங்கியதுடன் மக்களின் கனவுகள் சுக்கு நூறாகி மக்கள் வெறுக்கும் அளவிற்கு அவரின் ஆட்சி திறணற்றதாக மாறியதை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

ஒரு நாட்டின் தலைவர் குறிப்பாக ஜனநாயக நாட்டின் தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும், அவரின் கடமைகள் என்ன? பொறுப்புக்கள் என்ன? அவர் எவ்வாறு தனது ஆட்சியை கொண்டு செல்ல வேண்டும் என்ற சகல வரையறைகளையும் அறிந்த முதிர்ச்சி பெற்ற ஒரு அரசியல் தலைவர் தனது ஆட்சியில் இனவாதத்தை பாலூட்டி வளர்த்து விட்டு அதனால் தாராளமாகவே சுகம் அனுபவித்து விட்டு இன்று அவர் அன்று நடந்த சம்பவங்களுக்கு தான் பொறுப்பல்ல என்று கூறுவது எந்தளவு பிற்போக்கானதும், ஏமாற்றுவதுமான கருத்து என்பதனை மக்களாகிய அனைவரும் புரிந்திருப்பர்.

மஹிந்த தனது ஆட்சியில் பொதுபல சேனா, இராவணபலய, சிங்கள ராவய உள்ளிட்ட பல இனவாத தீவிரவாத சக்திகளை வளர்த்து விட்டு அவர்கள் இந்த நாட்டின் ஜனநாயக. குடியியல், பாதுகாப்பு, நீதி, நிர்வாக விடயங்கள் அனைத்தையுமே குழி தோண்டிப் புதைத்து விட்டு சிறுபான்மை முஸ்லிம்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் சமயத்தையும், சமயத்தளங்களையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கியது மட்டுமல்லாது முஸ்லிம் சமுகத்தின் பொருளாதாரத்தை முடக்கி அவர்களின் உடமைகளை தீயிட்டுக் கொழுத்தியும், சூறையாடியும் அடாவடித்தனங்கள் தாண்டவமாடியபோது ஒரு கனமேனும் அவற்றைக் கட்டுப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ முயற்சிக்காது இருந்து விட்டு இன்று ஆட்சி பறிபோன வெறியில் முஸ்லிம்களை அரட்டியும், மிரட்டியும் ஆட்சி செய்ததை மறந்து விட்டு தான் பொறுப்பில்லை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயமான விடயமாக அமையும்?

கடந்த 2014இல் அளுத்கம, தர்ஹா டவுன், பேரவல உள்ளிட்ட பகுதிகளில் பொதுபல சேனாவின் ஞானசார தேரரின் வழி நடத்தலில் செய்த அட்டூழியமும், அதன் மூலம் ஏற்பட்ட இழப்புக்கள், உயிர்ப்பலிகள் எல்லாவற்றையும் பொறுமைக்கு மேல் பொறுமை காத்து பட்ட துன்பங்களை எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு இந்த நாட்டின் சிறுபான்மை என்ற ஒரே காரணத்தால் தமது ஆதங்கங்களை எல்லாம் தத்தமது மனங்களுக்குள்ளேயே புதைத்து விட்டு மௌனம் காத்த சமுகத்தின் மத்தியில் இன்று அவர் நீலிக்கண்ணீர் வடிப்பது மீண்டும் முஸ்லிம் சமுகத்தினை வேதனைப்படுத்தி முன்னைய நிலைக்கு இட்டுச் செல்வதற்கு கங்கனங்கட்டுவதையே கோடிட்டுக் காட்டுகின்றது.

ஒரு நாட்டுத் தலைவன் தனது மக்களுக்குச் செய்ய வேண்டிய தலையாய கடமைகளை துஸ்பிரயோகம் செய்து அந்த மக்களுக்கு அநியாயங்களை இழைக்கப்பட்ட போதெல்லாம் பொறுப்பற்ற விதத்தில் இருந்து விட்டு பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கருத்துக்களை தெரிவிப்பது இந்த நல்லாட்சியிலும் அமைதியான சமுகங்களாக வாழும் இந்த மக்கள் மத்தியில் அமைதியற்ற நிலைமைகளைத் தோற்று விக்கும் ஒரு சதி முயற்சியின் கைங்கரியமாகவே பார்க்கப்படுகின்றது.

தேவையற்ற விதத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வன்முறைகள் மூலம் பள்ளிகளை உடைத்தும், இஸ்லாமிய மத்ரஸாக்களை தாக்கியும், ஹலாலான உணவகளுக்கு தடை வித்தித்தும், இஸ்லாமியப் பெண்களின் கண்ணியமான  ஹபாயா உடைகளை கொச்சைப்படுத்தியும், முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தகத்தை முடக்கும் விதத்தில் பொய்யான சண்டைகளை உண்டாக்கி இளைஞர்களை சிறையில் அடைத்தும், முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் பௌத்தத்தை கொச்சைப் படுத்தவதாகவும் ஆடைகளில் புத்தரின் படங்களை அச்சிட்டு விற்பதாகவும் அப்பட்டமான பொய்களைக் கூறி கடைகளை மூட வைத்தமை, நோ லிமிட் போன்ற பல வர்த்தக நிலையங்களை தீயிட்டுக் கொழுத்தியும், தாக்கியும் செய்ததுக்கு மேலாக பாணந்துறையில் ஒரு பௌத்த துறவி தான் வந்த வாகனத்தால் முஸ்லிம் வாலிபர்கள் மீது மோதி அவர்களை பொலிஸாரிடம் கைது செய்ய வைத்தமை போன்ற சொல்லிலடங்காத விரும்பத்தகாத செயற்பாடுகளைச் அனுபவித்த மக்களாக முஸ்லிம் காணப்படுகின்றனர்.

மேற்படி நிலைமைகளை அவ்வப்போது தகுந்த ஆதாரங்களை காட்டி மஹிந்த முதற்கொண்டு அவர்களின் முக்கிய அரசியல் பிரமகர்களிடமும் முறையிட்டும் ஒரு சதமளவேனும் கண்டு கொள்ளாத நிலையிலும் மஹிந்த அரசால் புத்தசாசன அமைச்சில் உருவாக்கப்பட்டிருக்கும் சமய சம்பந்தமான பிரச்சினைகளை முறைப்பாடு செய்ய அமைக்கப்பட்ட விஷேட பொலிஸ் பிரிவிலும் கூட நூற்றுக் கணக்கான முறைப்பாடுகளை தகுந்த ஆதாரங்களுடன் செய்தும் அதில் ஒன்றுக்குக் கூட நீதி, நியாயங்கள் பெற்றுக் கொடுக்காத மஹிந்த அரசு முஸ்லிம் சமுகத்தினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளை குப்பையில் போட்டது மட்டுமே அவர்கள் கண்ட பலனும் முஸ்லிம் சமுகத்திற்கு அதன் மூலம் கிடைத்த நியாயங்களுமாகும்.

ஓரு நாட்டின் தலைவர் என்பவர் அவர் அந்த நாட்டில் வாழும் பிச்சைக்காரன் தொடக்கம் செல்வந்தர் வரையான சகல மக்களுக்கும் பொறுப்பானவர். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ ஒரு குறிப்பிட்ட குழுக்களுக்கு மட்டுமே ஜனாதிபதியாக இருந்தார். முற்றய சமுகத்தினையோ அல்லது புத்தி ஜீவிகளையோ அனுகி ஜனநாயக வழியில் செல்வதற்குப் பதிலாக இனவாதக் குழுக்கள் இந்த நாட்டின் ஜனநாயகச் சட்டங்களை கையில் எடுத்து தாண்டவமாட இடங்கொடுத்த ஒருவராகவே அவர் காணப்பட்டார்.

இவ்வாறு தனது ஆட்சியல் ஒரு சிறந்த மக்கள் தலைவனாக செயற்படாது சர்வாதிகார போக்கில் சென்று அனைத்து சமாதான விரும்பிகளிடமிருந்தும் எதிர்ப்பையும், குரோதத்தையும் பெற்றதுடன் நாட்டு மக்களிடத்தில் ஏற்றத்தாழ்வுகளைக் காட்டி அவர் ஆட்சியிலிருந்து தூக்கி எறிவதற்கு வித்திட்டமையை இலங்கையில் அரசியல் வரலாற்றில் தற்காலத்தில் மக்கள் கண்டு கொண்ட சம்பவங்களாக அமைந்து விட்டது எனலாம்.

மேற்படி செயற்பாடுகளின் வெளிப்பாடுகளே அவரை அவரின் பூரணமான ஆட்சிக் காலம் முடிவதற்கு முன்னர் பதவியில் இருந்து அகற்றுவதற்கும் அதன் மூலம் இன்று அரசியல் அநாதையாகவும், பறிபோன அரசியல் அதிகாரங்களை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு விகாரைகளுக்கும், ஆலயங்களுக்கும் சுற்றித் திரிவதற்கு வழிவகுத்துள்ளது என்ற உண்மையையே இன்று அவரால் பாதிக்கப்பட்ட மக்கள் கண்டு கொள்ளக் கூடிய ஒரு விடயமாக அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

-சத்தார் எம் ஜாவித்

0 comments:

Post a Comment