கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

டெல்லி தேர்தல்; பிரதமர் ஆன பின்னர் பிரதமர் மோடி சந்திக்கும் முதல்-தோல்வி

புதுடெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் தோல்வி பிரதமர் ஆன பின்னர் பிரதமர் மோடி சந்திக்கும் முதல் தோல்வி என்று கருதப்படுகிறது.

குஜராத் மாநிலத்தில் மூன்று முறை முதல்-மந்திரியாக ஆட்சி செய்த நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கட்சிக்குள் எதிர்ப்பு காணப்பட்டாலும் குஜராத் வளர்ச்சியை முன்வைத்து அவர், வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மோடி கோஷத்தை வைத்து பாரதீய ஜனதா பிரசாரம் செய்தது. அதற்கு பெறும் வெற்றியே கிடைத்தது. பாராளுமன்றத் தேர்தலில்  பாரதீய ஜனதா தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றது.

பாரதீய ஜனதா கட்சி 282 தொகுதிகளில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி பிரதமராக பணியாற்றினார். தமிழகம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் பாரதீய ஜனதாவின் ஆதிக்கமே பாராளுமன்றத் தேர்தலில் காணப்பட்டது. இதனையடுத்து நாட்டில் நடைபெற்ற பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தலிலும் பிரதமர் மோடியை முன்வைத்தே பாரதீய ஜனதா பிரசாரம் செய்தது. அதற்கும் கைமேல் பலன் கிடைத்தது.. 

2014 பாராளுமன்றத் தேர்தலை அடுத்து நடைபெற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களில் ஜம்மு காஷ்மீர் தவிர்த்து மற்ற மாநிலங்களில்  பாரதீய ஜனதாவிற்கே முதலிடம் என்ற நிலை காணப்பட்டது. 

2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு அடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் விபரங்கள்

2014 அக்டோபர் மாதம் நடைபெற்ற அரியானா, மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியே வெற்றிபெற்றது.

இருமாநிலங்களிலும் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியை பாரதீய ஜனதா வெளியேற்றியது. மராட்டியத்தில் 15 வருடங்களுக்கு பின்னர் முதல்-முறையாக பாரதீய ஜனதா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. சிவசேனா கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிட்டு 122 தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றிபெற்றது. தேர்தலை அடுத்து 63 தொகுதிகளில் வெற்றிபெற்ற சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. 

அரியானாவிலும் காங்கிரஸ் கட்சியை வெளியேற்றிய பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாரதீய ஜனதா 47 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இருமாநிலங்களில் பிரதமர் மோடி தீவிர பிரசாரம் செய்தார். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் பாரதீய ஜனதாவிற்கு வெற்றி முகமே காணப்பட்டது. 

ஜார்கண்ட் மாநிலத்தில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கத்துடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. மாநிலத்தில் முதலிடம் பிடித்த பாரதீய ஜனதா முதல்-முறையாக மாநிலத்தில் நிலையான ஆட்சியை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரில் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கவில்லை என்றாலும், இதுவரையில் இல்லாத அளவு மாநிலத்தில் பாரதீய ஜனதாவின் வளர்ச்சி காணப்பட்டது. 

பாரதீய ஜனதா இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் 25 தொகுதிகளை கைப்பற்றி இரண்டாவது இடத்திற்கு வந்தது. இது பாரதீய ஜனதாவிற்கு பெரிய வெற்றியாகவே பார்க்கப்பட்டது.

நரேந்திர மோடி பிரதமர் ஆன பின்னர் தொடர்ந்து வெற்றி பாதையிலே சென்ற பாரதீய ஜனதாவிற்கு சிறிய சரிவாக டெல்லி சட்டமன்றத் தேர்தல் அமைத்துள்ளது. இது பிரதமர் மோடி தான் பிரதமர் ஆன பின்னர் முதல் முறையாக சந்திக்கும் முதல் தோல்வி என்று கருதப்படுகிறது. 

வெறும் 4 தொகுதிகளில் முன்னிலை

கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாவிற்கே முதலிடம் கிடைத்தது. பாரதீய ஜனதா 32 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க முடியவில்லை. 28 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடம் பிடித்த ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தார். ஆனால் ஆட்சி நீடிக்கவில்லை. ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமைக்கப்பட்டது. மீண்டும் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. தேர்தல்  முடிவு விபரம் பாரதீய ஜனதாவிற்கு பெரிய பின்னடைவாகவே உள்ளது. கடந்த தேர்தலில் 32 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக முதலிடம் வந்த பாரதீய ஜனதாவால் 5 இடங்களைகூட நெருங்க முடியவில்லை. காலைய நிலவரப்படி பாரதீய ஜனதா 12 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்ததாலும், அடுத்தத்தடுத்த வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மிக்கு சாதகமான நிலைபாடே காணப்பட்டது. ஆம் ஆத்மி கட்சி 65 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி மீண்டும் டெல்லியில் ஆட்சி அமைக்கிறது. 

0 comments:

Post a Comment