கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

திஹாரியில் முஸ்லிம் பாடசாலைக்கு உதவி செய்ததன விளைவு? ஆனாலும் நான் பின்வாங்க மாட்டேன்.

உலகிற்கு அனுப்பப்பட்ட மதப் போதகர்களுள் புத்த பெருமானே சகவாழ்வை வலியுறுத்திப் பேசியுள்ளார். மனிதனாக பிறந்த புத்தர் பௌத்தத்துவத்தின் உன்னத நிலைக்கு தனது மனதை கொண்டு சென்றார். அவ்வுன்னதமான உள்ளத்தில் சகலரும் சமமானவர்கள் என்ற கருத்தை வலியுறுத்தினார். 



இப்பிறவியில் நல்ல மனிதராக இருந்தால் மறுபிறவியில் மனிதனாகவும் கடவுளாகவும் பிறப்பார். தீய செயல்களுக்கமைய அவன் மிருகமாகவோ அல்லது இழிவான ஒருவனாகவோ பிறவியெடுப்பான்.

நாம் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளை போல் அடுத்தவர்களது உரிமையையும் கௌரவத்தையும் மதித்து, புத்த பெருமானின் சகவாழ்வுக் கொள்கையை பின்பற்றி, ஓரினம் என்ற அடிப்படையில் வாழ வேண்டும். புத்த பெருமான் எப்பொழுதும் ‘சப்ப சத்தேது மித்த விகாரா’ என்பார்கள். அதாவது எல்லோருடனும் அன்போடு நடந்து கொள்ளுமாறு கூறுகிறார். 

சூரியன் உலகில் உயர்வு-தாழ்வு, கறுப்பினம்-வெள்ளையினம், ஏழை- பணக்காரர் என்பதாக பாகுபாடு பார்த்து வெளிச்சம் கொடுப்பதில்லை. அது போன்றுதான் புத்த பெருமானும். சகல உயிரினங்களுக்கும் கருணை காட்டுமாறு போதித்துள்ளார். புத்தர் போதித்த கரு ணையில் இனப்பாகுபாடுகள் கிடை யாது. சகல உயிர்களுக்கும் நல்லதே நடக்க வேண்டும் என நாம் காலை மாலையில் ‘சுவபத்வேவா’ என்று பிரார்த்திக்கிறோம். 

இவ்வாறான நடைமுறைப் பழக்கங்களுக்கு முற்றிலும் விரோதமான முறையில் ஏனைய இனத்தவர்களை எமக்கு பாகுபடுத்திப் பார்க்க முடியாது. நான் ஒரு பௌத்தன் என்ற வகையில் பௌத்த மதத்தை பின்பற்றுகிறேன். அது போன்று ஏனைய மதங்களையும் புரிந்து வைத்துள்ளேன். அதை அவர்களுக்குப் பின்பற்றும் உரிமையும் உள்ளது. அது போன்று அதை போதிக்கும் உரிமையும் உள்ளது. எல்லோரையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. 

நான் சில காலம் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் பௌத்த மதத்தை போதித்து வந்தேன். என்னிடம் பல மதத்தவர்கள் வந்து பௌத்தத்தை கற்கிறார்கள். அவர்களுக்கு நான் போதிக் கிறேன். ஆனால் அவர்கள் இதில் இணைய வேண்டும் என்ற வற்புறுத்தவில்லை. 

நாம் அமெரிக்காவில் விகாரையொன்றை ஆரம்பித்தோம். வெசாக் பண்டிகைக்கு, வெசாக் கூடொன்றை உருவாக்க வேண்டியிருந்தது. அப்போது ஒருவரும் இருக்கவில்லை. பைஸல் என்ற முஸ் லிம் சகோதரர் எமக்கு அதை செய்து தந்தார். அக்காலத்தில் கணினி வசதிகள் எதுவும் காணப்படவில்லை. எனக்கு ஒரு தட்டச்சு உபகரணம் தேவைப்பட்டது. ஒரு முஸ்லிம் வாலிபர் அதை எனக்குத் தந்துதவினார்.

இன்றும் கூட அங்கு முஸ்லிம்கள் எம்மோடு  அன்னியோன்ய உறவுகளை பேணி வருகிறார்கள். அமெரிக்காவில் மாத்திரமல்ல, நான் தாய்வானில் இருக்கும் பொழுதும் ஜப்பானில் இருக்கும் பொழுதும் முஸ்லிம்கள் எமக்குக் கூடுதலாக உதவி புரிந்தார்கள். ஏனைய மதத்தவர்களும் அப்படித்தான். 

எமது பண்பாடுகள் பழக்க வழக்கங்கள் எல்லோருக்கும் நியாயமானதாக இருந்தால், எனக்கொரு தீங்கும் அடுத்தவர்களுக்கு ஒரு தீங்கும் ஏற்படுவதில்லை என்றால், அதைப் பின்பற்றுவதில் தவறுவதில்லை. 

எல்லா மதத்திலும் தீவிரவாதப் போக்குடையவர்கள் உள்ளார்கள். அவர்களே சமூகத்தில் சீர்கேடுகளை ஏற்படுத்துகிறார்கள். பள்ளிகளை அழிக்கிறார்கள். விகாரைகளை உடைக்கிறார்கள். இனவாதத்தை தூண்டுகிறார்கள். மனது உள்ளவர்களுக்கே மனிதர் என்கிறோம். எனவே மனதால் சிந்தித்து கெட்டதை பிரித்தறிந்து நல்லவற்றை எப்போதும் மனதில் புகுத்த வேண்டும். 

இது கறுப்பு அது வெள்ளை என்பதை விளங்க வேண்டும். கறுப்பு இருப்பதனால் தான் வெள்ளையை எமக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. எல்லா மதத்திலும் பொய் தவறு எனப்படுகிறது.   ஒரு பொய்யால் குடும்பமொன்று அழியலாம். சமூகமும் அழியலாம். 

எமது சிறிய நாட்டில் சகல மதத்தவர்களும் உள்ளார்கள். எல்லோரையும் மதிக்க வேண்டும் ‘காலாம’ சூத்திரத்தில் புத்த பொருமான் எல்லா மதப் போதனைகளையும் மதிக்குமாறும் நல்லவற்றை எடுக்குமாறும் கூறியுள்ளார். இளம் தலைமுறைக்கு நாம் நல்லதொரு முன்மாதிரியை வழங்க வேண்டும். புத்தர் பௌத்தத்தை அடைய முன்னர் ஏனையவர்களுக்கே உபதேசம் செய்தார்கள். நாம் வலுக்கட்டாயமான முறையில் மதத்தை போதிக்கக் கூடாது. 

பிள்ளைகளின் படிப்புக்கு நான் உதவுகிறேன். நான் சகல இன மாணவர்களுக்கும் புலமை பரிசில் கொடுக்கிறேன். என்னிடம் புலமைப்பரிசில் பெற்று களனி பல்கலையில் மருத்துவர்களான நிறைய முஸ்லிம்கள் உள்ளார்கள். அவர்கள் என்னை மதிக்கிறார்கள். அது போதும் எனக்கு.  சமூகத்திற்கு நல்லவற்றை செய்ய மருத்துவர் தேவை. அதை உருவாக்குவதில் இனப் பாகுபாடு பார்க்கத் தேவையில்லை. 

திஹாரி அல்-அஸ்ஹர் பாடசாலைக்கு தேவையான கட்டிடமொன்றை எனது சொந்த செலவில் கட்டிக் கொடுக்க தீர்மானித்தேன். அன்றிலிருந்து எனது பேஸ்புக் பக்கத்திற்கு நிறைய எதிர்ப்புக்கள் வந்தன. நான் தொலைபேசியை செயலிழக்கச் செய்தேன். எமது இலக்கு நல்லதொரு மாணவர் சந்ததியை உருவாக்குவது. அதன் படி ஒரு சமூகம் உருவானால் அவர்களும் எதிர்காலத்தில்  இது போன்ற விடயங்களை செய்வார்கள். முஸ்லிம்கள் அழைக்கும் பொது நிகழ்வுகளில் நான் கலந்து கொள்கிறேன். இந்துக் குழந்தைகளுக்காகவும் ஒரு கல்விக் கூடத்தை யாழ்ப்பாணத்திலோ அல்லது வேறு எங்காவதோ கட்டிக் கொடுக்கும் எதிர்பார்ப்பில் உள்ளேன். 

அன்று முஸ்லிம்கள் எமக்கு அதிகளவில் உதவினார்கள். அன்று அடிக்கல் நாட்டு விழாவில் மௌலவி அவர்கள், நீங்கள் பாடசாலைக்கு அடிக்கல் நாட்டவில்லை, நல்லிணக்கத்திற்கு அடிக்கல் நாட்டினீர்கள் என்றார். எவ்வளவு இனிமையான கருத்து இது. இவற்றையல்லவா ஊடகங்கள் வாயிலாக மக்களுக்குச் சொல்ல வேண்டும். திஹாரி, கஹடோவிட போன்ற கிராமங்களில் உள்ள மக்கள் மனதில் எம்மை பற்றி நல்லதொரு மனப்பதிவு உள்ளது. 

எம்மிடம் ஐந்து விரல்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். இந்த சமூகத்தில் தீவிரவாதப் போக்குடையவர்கள் உள்ளார்கள். பண்டாரநாயக்கவினை கொலை செய்த புத்த ரக்கித தேரரை அன்று எல்லோரும் கடுமையாகச் சாடினார்கள். எனவே கடும்போக்கு சிந்தனை படைத்தவர்கள் சகல மதங்களி லும் உள்ளார்கள். எம்மிடம் எல்லா பிரிவுகளிலும் குறைபாடுகள் உள்ளன. 

உண்மையை சொல்லி மக்களை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது. அதன் மூலம் நல்லிணக்கம் ஏற்படும். நாம் எல்லோரும் ஒன்றுபட்டு புரிந்துணர்வுடன் வாழ வேண்டும் என்ற கொள்கையை முதலில் மக்கள் மயப்படுத்த வேண்டும். 

 மார்க்க தலைவர்களாக இருந்தாலும் சமூக செயற்பாடுகளில் முன் நிற்கிறார்களில்லை. நான் குறித்த பாடசாலை கட்டிடத்தை நிர்மாணிக்கவுள்ளேன் என கேள்விப்பட்டு பிரதேசத்தை சேர்ந்த ஒரு தேரர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவினார். அவரது குரல் சற்று வித்தியாசமாக இருந்தது. தேவையற்ற முறையில் கதைத்தார். அது போன்ற பணிகளை எதற்குச் செய்கிறீர் கள் என்ற வகையிலான கருத்துக்களை கூறினார். 

நான் அவருக்கு நல்ல விடயங்களைக் கூறினேன். தெளிவுபடுத்தினேன். குரோதம் கொள்வதில் அர்த்தமில்லை. சகலரையும் மதிக்க வேண்டும் என்ற கருத்தை கூறினேன். மறுநாள் அவர் என்னை அழைத்து அவர் நண்பர்களிடம் கதைத்ததாகவும் இது போன்ற நல்ல விடயங்கள் தேவை என்றும் கூறினார். எனவே இதுபோன்ற நல்ல விடயங்களை செய்வதன் மூலம் தீய கொள்கை படைத்த ஒருவருக்கு நல்ல பார்வையை ஏற்படுத்துவதே எமக்கு தேவை. இதன் மூலமே நல்லிணக்கம் வலுப்பெறும். 

எல்லா மதத்திலும் உள்ள ஒரு சில தீவிரப்போக்குடையவர்களை நல்வழிக்கு கொண்டு வரும் கடப்பாடு மதகுரு மார்களுக்குள்ளது. நான் இந்து, நான் முஸ்லிம், பௌத்தன் என்று லேபல் குத்துவதை விட நல்ல மனிதப் பண்புகளை பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். 

எல்லோரும் ஒன்றிணையும்போது நல்லவற்றை இலகுவாகச் செய்யலாம். சமவுடைமையோடு அடுத்த மதத்தவர் களோடு நல்ல முறையில் உரையாடல்களை அதிகரிக்க வேண்டும். முஸ்லிம் மதப்போதகர்கள், பெரியோர், வளர்ந்த வர்கள், பெற்றோர் பிள்ளைகளை வளர்க்கும் போது நல்லதை சொல்லி கொடுக்க வேண்டும் அடுத்த மதத்தவர்களை பற்றி நல்ல அபிப்பிராயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். அப் போது நல்லிணக்கம் மிக்க சூழலை இலகுவாக வடிவமைத்துக் கொள்ளலாம். 

புத்த பெருமானின் ஒரு போதனை இங்கு நினைவுகூறத்தக்கது. ‘பரத்தன் படிபஜ்ஜத்’ அடுத்தவர்களின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் நலவுகளுக்கும் எம்மால் முடியுமான வகையில் உதவி புரிய வேண்டும். இவ்வகையிலேயே நான் என்னாலான நற்பணிகளை செய்து வருகிறேன். 

ஏழை மக்களுக்கு நான் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளேன். 336 சுனாமி வீடுகளை ஒரு வருடத்திற்குள் கட்டிக் கொடுத்தேன். அதில் ஒருபோதும் இன வேறுபாடு பார்க்கவில்லை. கல்முனை யில் சிறுவர் பாடசாலையொன்றை கட் டிக் கொடுத்தேன். வைத்தியசாலைகளுக்கு கட்டில்களை வழங்கினேன். அடுத்தவர்களின் நலனுக்காக வேண்டி என்னாலான சகல பணிகளையும் புத்த பெருமானின் போதனைகளுக்கமைய செய்து வருகிறேன். 

சமுதாயத்தை நாம் வேறுபட்ட கண்ணாடிகளால் பார்க்கக் கூடாது. அதை நீக்கி விட்டு நிஜத்தை பார்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மனது தான் காரணம். மனதை திடப்படுத்த வேண்டும். அப்போது எல்லாப் பகுதிகளும் சீராக அமையும்.

- அனஸ் அப்பாஸ் - 

0 comments:

Post a Comment