கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தேர்தல் தினத்தன்று இரவு தேர்தல் ஆணையாளருக்கு என்ன நடந்தது?


தேர்தல் முடிவுகளை வெளியிட்டு உரையாற்றிய தேர்தல் ஆணையாளரின் கருத்துக்கள் மூலம் அவர் ஏதேனும் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கலாம் எனத் தெரியவருகிறது. இந்த நிலைமையானது ஜனநாயகம் தொடர்பான மிகவும் பயங்கரமானதும் ஆபத்தான துமான ஒன்றாகும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் அவர் கூறியவை வருமாறு:-
தேர்தல் ஆணையாளரின் உரையின் மூலம் அவர் எதிர்பார்த்தவாறு அரசதலைவர் தேர்தல் பணிகளை முன்னெடுக்க முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது. உண்மையில் அவருக்கு என்ன நேர்ந்தது?. தேர்தல் நடைபெற்ற தினத்தன்று இரவு தேர்தல் ஆணையாளர் ஏதேனும் அழுத்தங்களை எதிர்நோக்கினாரா?. அல்லது அதற்கு முன்னர் அழுத்தங்களுக்கு அடிபணிந்தாரா? அச்சுறுத்தலை எதிர்நோக்கினாரா?
தேர்தல் ஆணையாளர் இதற்கு முன்னர் தேர்தல்கள் முடிவுற்ற பின்னர் வெளியிட்ட கருத்துக்களுக்கும் அவர் தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கும் முற்றும் முழுதான வேறுபாடு உள்ளது. தேர்தல் ஆணையாளரின் உரையின் மூலம் ஏதேனும் மர்மம் ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது. ஏதாவது சம்பவமொன்று நேர்ந்தால் அதனைத் தனியாக தானே அனுபவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் இந்த நிலைமை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். இது குறித்து ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானமொன்றை எடுத்துள்ளது. ஏனைய கட்சிகளுடன் இது பற்றி கலந்துரையாடி வருகிறோம்.
சரத் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள்
அதேவேளை, பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. அவர் சுதந்திரமாகப் பணியாற்ற சந்தர்ப்பமளிக்கப்பட வேண்டும். அவருக்கு ஏற்படுத்தப்படும் அழுத்தங்கள், இடையூறுகளில் இருந்த அவரை விடுவிக்க வேண்டும். எந்ததொரு தேர்தலின் பின்னரும் அனைத்து தரப்பினரும் மீண்டும் கூடி ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
எனினும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அவ்வாறான நிலைமை ஏற்படவில்லை. நாடு முழுவதும் வன்முறை பரவி வருகிறது. அரசின் வன்முறையாளர்கள் பல்வேறு வகையில் தமது எதிர்வாதிகளை பழிவாங்கி வருகின்றனர்.
தேர்தல் தினத்தில் அமைதியைப் பேணிய பொலிஸரால் தற்போது அமைதியை பேண முடியாதுள்ளது. தேர்தலின் பின்னர் அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் சகலரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்த போதிலும் அவ்வாறான நிலைமையை ஏற்படுத்துவதற்கான முனைப்புகளை அரசு மேற்கொள்ளவில்லை. அரசு இராணுவத்தினரைப் பயன்படுத்தி கொழும்பில் விடுதியை சுற்றிவளைக்க முடியுமானால் சாதாரண மக்களைப் பாதுகாக்க ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது?
எந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஒரு வேட்பாளர் வெற்றிப் பெற்று ஏனைய வேட்பாளர்கள் தோல்வியடைவார்கள். எனினும் ஒருபோதும் ஜனநாயகம் தோற்பதற்கோ, தோற்கடிக்கப்படவோ இடமளிக்க முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க சகல சட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். ஜனநாயகம் தோல்வியடைவதென்பது மக்களின் அடிப்படை உரிமை மற்றும் வாக்குரிமை இல்லாமல் செய்யப்படுவதாகும். தேர்தலில் வாக்குகளைப் பயன்படுத்தி மக்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது ஜனநாயகத்தை மீறுவதாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சகல அரசியல் கட்சிகளும் பேதமின்றி இந்தச் சந்தர்ப்பத்தில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டனர். அதனடிப்படையில் ஐக்கிய தேசிய முன்னணி அவருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தது. அவருக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றிக் கூறுகிறோம். அதேபோல் தேர்தலில் உரிய முறையில் பணியாற்றி பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.
தேர்தல் தினத்தன்று காலை 7 முதல் மாலை 4 மணிவரை வன்முறைகள் இன்றி அமைதியாகத் தேர்தல் நடைபெற்றது. எனினும் அன்றைய தினம் இரவு வாக்கு எண்ணும் மையங்களுக்குள் தமது வன்முறை குழுக்களுடன் பிரவேசித்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கு எண்ணும் பணிகளைப் பார்வையிடச் சென்ற பலரை விரட்டியடித்தனர்.
தமது கட்சியின் ஆதரவாளர்களை தவிர ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்களை வாக்கு எண்ணும் நடவடிக்கைகளை பார்வையிட அனுமதிக்கவில்லை. இது சம்பந்தமாக விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஆளும் தரப்பினர் சிலர் வாக்கு எணணும் மையங்களில் கணக்கெடுப்பை அவதானித்துக் கொண்டிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர். மேலும் தமது அதிகாரிகளைக் கூட பாதுகாத்து கொள்ள முடியாமல் போனது என ஆணையாளர் தமது அறிக்கையில் கூறியுள்ளார் என்றார் ரணில்.

-பாரிஸ்தமிழ்

0 comments:

Post a Comment