ரஷ்ய விமான விபத்தில் போலந்து அதிபர் உள்பட 132 பேர் பலி!

மாஸ்கோ: போலந்து அதிபர் லெக் காக்ஸின்ஸ்கி இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார்.
அவரது மனைவி, முக்கிய அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட சுமார் 132 பேர் அந்த விமான விபத்தில் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் நாடு கடத்தப்பட்ட முன்னாள் அதிபர் ரிஸ்ஸார்ட், நாடாளுமன்றத் துணைத் தலைவர் ஜெர்ஸி ஸ்மஜ்ஸின்ஸ்கி, அதிபர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி லாடிஸ்லா ஸ்டாசியக் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.
ரஷ்யாவில் உள்ள ஸ்மோலென்ஸ்க் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க முயன்றபோது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
விமான நிலையம் அருகேயுள்ள மரங்களில் அந்த விமானத்தின் இறக்கைப் பகுதிகள் மோதியதால் விமானம் தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ரஷ்யாவின் மின்ஸ்க் நகரில் இந்த விமானத்தைத் தரையிறக்கலாம் என்ற யோசனையை மீறி, பைலட் செய்த தவறுதான் இந்த விபத்துக்குக் காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது 22 ஆயிரம் போலந்து ராணுவ அதிகாரிகளை சோவியத் படைகள் படுகொலை செய்ததன் 70வது நினைவு தின நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக போலந்து அதிபரும் முக்கிய பிரமுகர்களும் வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
போலந்து அதிபர் உட்பட அந்த விமானத்தில் பயணம் செய்த அத்தனை பேரும் உயிரிழந்ததை ஸ்மோலென்ஸ்க் நகர மேயர் உறுதிபடுத்தியுள்ளார். மேலும், போலந்து நாட்டின் ‘டிவிஎன் 24′ செய்தித் தொலைக்காட்சியும் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
அதிபரின் மரணச் செய்தி போலந்து நாட்டையே ஸ்தமபிக்கச் செய்துள்ளது. மக்கள் கண்ணீருடன் இச் செய்தியைப் பகிர்ந்து கொண்டனர்.

பலியானதாக கூறப்படும் போலந்து அதிபர் லெக் காக்சின்ஸ்கிக்கு வயது 60. கடந்த 2005ம் ஆண்டு அதிபர் பொறுப்பை ஏற்றார். அவருடன் பலியான மனைவி மரியா பொருளாதாரத் துறை நிபுணர்.
-என்வழி செய்திகள்
0 comments:
Post a Comment