கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

விமானத்துடன் பறவை மோதியது - நடுவானில் 1 மணி 20 நிமிடங்கள் வட்டமடித்த விமானம்


திருச்சியில் இருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தின் இறக்கையில் பறவை மோதியது. இதனால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு திருச்சி வந்தது. மாலை 4.30 மணியளவில் 124 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், ரன்வேயில் ஓடி மேலே எழுந்த போது வட்டமடித்து கொண்டிருந்த பறவை, விமான இறக்கை பகுதியில் மோதியது. இதை கவனித்த பைலட், திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானத்தை தரையிறக்க உத்தரவு வழங்கப்பட்டது.

விமானத்தில் எரிபொருள் அதிக அளவு இருந்ததால், இறங்கும் போது அசம்பாவிதம் நிகழ்ந்தால் பெரிய விபத்து ஏற்பட்டு விடும். எரிபொருளை குறைக்க உடனே விமானத்தை தரையிறக்காமல் வானில் வட்டமடித்து கொண்டே இருந்தது. இதனால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ஓடுபாதையில் தயாராக நின்றன. இந்த தகவல் விமானத்தில் இருந்த பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

விமானம் 1 மணி 20 நிமிடங்கள் வட்டமடித்து எரிபொருளை ஓரளவுக்கு குறைத்த பின்னர் மாலை 5.50 மணிக்கு தரையிறக்கப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தின் இறக்கை பகுதியை சோதனை செய்தனர். பறவை மோதியதால் எந்த கோளாறும் ஏற்படவில்லை என தெரிய வந்தது. அதன்பின்னர் விமானத்தை இயக்கலாம் என வல்லுனர்கள் கூறியதையடுத்து மீண்டும் விமானம் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.

விமானத்தின் இன்ஜின் பகுதியில் பறவை மோதினால் விமானம் வெடித்து சிதறும் அபாயம் உள்ளது. இறக்கை பகுதியில் மோதினாலும் ஒரு சில நேரங்களில் ஆபத்து நேரிடும். விமான நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் இறைச்சி கடைகளுக்கு அனுமதி மறுக்கப்படும். ஆனால், திருச்சி விமான நிலையத்தை சுற்றிலும் இறைச்சி கடைகள் உள்ளன. விமான நிலையத்தின் அருகிலேயே இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் இவற்றை உண்பதற்காக பறவைகள் அதிகளவில் சுற்றி திரியும்.

இதற்கு விமான நிலைய அதிகாரிகள் மாநகராட்சி மற்றும் போலீஸ் துணையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் திருச்சி விமான நிலைய அதிகாரிகள் இவ்விஷயத்தில் மெத்தனம் காட்டுகின்றனர் என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். விமானத்தின் இறக்கை பகுதியில் பறவைகள் மோதி பாதிப்பை ஏற்படுத்துவதில் இந்தியாவில் திருச்சி விமான நிலையம் 3வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Jaffna Muslim 

0 comments:

Post a Comment