கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இடிந்துபோன ராஜபக்ஷ கோட்டைக்குள், குவிந்திருந்த ஆசியாவின் ஆச்சர்யங்கள்

சுதந்திர இலங்கையின் வரலாற்றில் பல தகவல்களைப் படித்துத் தெரிந்து கொண்ட எமக்கு நிகழ்கால நடப்புக்கள் தொடர்பான காட்சிகளை நேரடியாகப் பார்க்க வாய்த்திருக்கின்றது. இலங்கையில் மிகப் பாரிய மஹவலி அபிவிருத்தித் திட்டத்தை அன்று துவக்கி வைத்த போது, நாட்டை ஆசியாவின் தானியக் களஞ்சியமாக மாற்றப்போவதாகவும் இந்தியாவுக்கே மின்சாரத்தை ஏற்றுமதி செய்யப்போவதாகவும் அப்போதய பிரதமர் ட்டலி சேனநாயக்க அன்றைய துவக்க விழாவின் போது குறிப்பிட்டிருந்தார். 1978 அரசியல் யாப்பைத் தோற்றுவித்த ஜே.ஆர். ஜெயவர்தன நாட்டை ஒரு சிங்கப்பூராக கட்டியெழுப்பப் போவதாக சூளுரைத்திருந்தார். இவை கடந்த கால வரலாறு. 

இந்தக் கதைகளுடன் மக்களுக்கு ஒரு புதுக்கதை விட்டு ஆட்சியை தொடர முனைந்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இந்த நாட்டைத் தான் ஆசியாவின் ஆச்சர்யமான ஒரு நாடக மாற்றிக் காட்டப் போவதாக் அவர் கூறி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார். அப்படியானால் சீனா, யப்பான், மலேசியா, சிங்கப்பூர் என்பவற்றை விஞ்சிய முன்னேற்றம் போலும்.! ஆனால் நாடு ஆசியாவின் ஆச்சர்யமாகியதோ இல்லையோ நாட்டில் பல ஆச்சர்யங்கள் அவர் காலத்தில் இங்கு நடந்திருக்கின்றது என்பதனை இப்போது நாடும் உலகமும் பார்த்துக் கொண்டிருக்கின்றது. 

கடந்த வாரம் மக்கள் ஆணைக்கு எதிராக ராஜபக்ஷ கோட்டைக்குள் நடந்த இராணுவச்சதி பற்றிய தகவல்களைச் சொல்லி இருந்தோம். இந்த வாரம் இடிந்து போன ராஜபக்ஷ கோட்டைக்குள் குவிந்து கிடந்த ஆசியாவின் ஆச்சர்யங்கள் பற்றிப் பார்க்கலாம் என்று தோன்றுகின்றது. நாட்டை ஆசியாவின் ஆச்சர்யமாக மாற்றிக் காட்டுக்கின்றேன் பார் என்று மக்களுக்கு சொன்ன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டை இடிந்து போன நிலையில் இன்று அந்தக் கோட்டைக்குள் நடந்த ஆச்சர்யங்கள் பற்றி நாடே பேசிக் கொண்டிருக்கின்றது. இப்போது அது பற்றிப் பார்ப்போம்.

காலி கடற் பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த கொள்களன்களில் பெருந் தொகையான ஆயுதங்கள் பற்றி ஊடகங்களில் பேசப்பட்டது அந்த ஊடகங்கள் அனைத்தும் சட்டரீயானதுதான் என்று புதிய பாதுகாப்புச் செயலாளரும் சான்றிதழ் கொடுத்திருக்கின்றார். என்றாலும் ராஜபக்ஷாக்களின் காலத்தின் துவக்கப்பட்ட இந்த கடற் பிராயாணங்களின் போது கப்பல்கள் கொள்ளையிடுவதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு என உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற இந்த ஆயுதப் பிரிவில் இந்தளவு ஆயுதங்கள் எதற்கு என்ற கேள்விகள் இன்னும் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆயுதங்களுக்குப் புறம்பாக அங்கு 12 இலட்சம் பல்வேறு வகையான தோடகள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே புதிய பாதுகாப்புச் செயலாளர் இது சட்டரீயானது என்று கூறினாலும் இந்த ஆயுதங்கள் தொடர்பான விவகாரம் இன்னும் தீர்ந்து விட்டடதாகத் தெரிய வில்லை. மேலும் இன்னும் மூன்று இடங்களில் இது போன்று தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகின்ற ஆயுகங்கள் பதுக்கிவைத்திருக்கின்ற இடங்கள் தொடர்பான தகவல் கிடைத்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருக்கின்றார். மேலும் பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்திலும் பெருந் தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டிருக்கின்றது.

ரத்தன லங்கா என்ற தனியார் ஆயுத நிறுவனத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் யார் யாருக்க விநியோகிக்கப்பட்டது என்று விபரங்கள் பற்றி தற்போது தேடப்ட்டுக்
கொண்டிருக்கின்றது. இதில் 151 ஆயுதங்கள் மட்டுமே தற்போது இருப்பதாகக் கூறபப்டுகின்றது. ஏனையவற்றிற்கு என்ன நடந்தது என்பதும் கேள்விக்குறியாக இருக்கின்றது. மேலும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தனியான பாதுக்காப்புப் பிரிவொன்றை வழி நடாத்தி வந்திருக்கின்றார் என்று கூறப்படுகின்ற நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் கையாள் என்று முழு நாடுமே அறிந்த அமைச்சர் மேர்வின் சில்வா நாட்டில் நடந்த முக்கியமான படுகொலைகளுக்கு குறிப்பாக ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்ஹவின் படுகொலை, பாரத லக்ஸ்மன் படுகொலை போன்றவற்றிற்கு நேரடியாக கோட்டபே ராஜபக்ஷதான் காரணம் என்று அவர் கூறியது மட்டுமல்லாமல், அந்த தகவல்கள் தொடர்பான முறைப்பாட்டையும் எழுத்து மூலமாக சட்டத்தரணிகள் ஊடக குற்ற பிரிவுக்கு கையளித்து, ராஜபக்ஷக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா. இதுவும் ஆசியாவின் ஒரு ஆச்சர்யமாகத் தான் மக்கள் தற்போது பார்க்கின்றார்கள். 

தேர்தல் காலங்களில் விநியோகிப்பதற்காக சீனாவிலிருந்து கொண்டவரப்பட்ட ஆயிரக் கணக்கான ராஜபக்ஷவினதும் நாமலிதும் உருவங்கள் பெறித்த சுவர் கடிகாரங்கள் பல இடங்களில் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றது இவற்றின் பெறுமதி கோடிக் கணக்கான ரூபாய்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கின்றது. இதற்கு மேலாக தேர்தல் காலங்களில் சட்டத்திற்கு முறனான வகையில் விநியோகிப்பதற்காக பதுக்கி வைக்கபட்டடிருந்த பொருந் தொகையான பொருட்கள் நாட்டில் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றது. 

ஜோன் கொத்தலாவலை பாதுகாப்புக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கின்ற தனியார் வைத்திய கல்லூரியை நிறுவுவதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபே ராஜபக்ஷ  அரச வங்கிகளில் இருந்து பல நூறு கோடி பணத்தை கடனாக எடுத்திருக்கின்றார். இந்தக் கடனைத் திருப்பிக் கட்டுகின்ற பொறுப்பை அவர் இலங்கை மின்சார சபையிடம் ஒப்படைத்திருக்கின்றார். எனவே அவர்பெற்ற கடனைக் கட்டுவதற்கு இன்று மக்களிடமிருந்து அந்த நிறுவனங்கள் அதிகமான கட்டணங்களை மின்சாரத்திற்காக அறவிட்டுக் கொண்டிருக்கின்றது என்று அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டுகின்றார். எனவே இதுவும் ஆசியாவின ஓர் ஆச்சர்யம்தான் என்று கூற வேண்டும்.

மேலும் கோட்டபே ராஜபக்ஷ பெயரில் 800 கோடி வங்கியில் இருக்கின்றது என்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றது என்று ஒரு தகவல் வெளி வந்தது. பின்னர் அந்த வங்கிக் கணக்கு பாதுகாப்பு தொடர்பான சட்ட ரீதியான கணக்குகள் என்று அதிகாரிகள் குறிப்பிட்டாலும் அப்படி ஒரு கணக்கை கோட்டாபே தனது பெயரில் வைத்திருக்க முடியாது அது இலங்கை அரசின் நிதி நிறுவனங்களின் நடைமுறைக்கு முறனானது ஒழுங்கு முறை. இது பற்றிய விசாரணைகள தொடரும் என்று தற்போதய அரசின் ஊடகப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனரத்ன அடித்துக் கூறுகின்றார். மேலும் அரசின் நிதி நிருவாக நடைமுறை தெரியாத இராணுவ அதிகாரிகள் இது பற்றி கருத்துக் கூறக் கூடாது என்றும் அவர் சொல்லி இருக்கின்றார்.

பாதுகாப்பு அமைச்சில் நடிகை ஒருவருக்கு பதவி வழங்கி அவருக்கு இலட்சக் கணக்கான ரூபாய்களை கோட்டபே ராஜபக்ஷ சம்பளமாக வழங்கி இருக்கின்றார் என்று கூறப்படுகின்றது. இந்த நடிகை பாதுகாப்பு அமைச்சில் பார்த்த வேலை என்ன என்று அங்குள்ள அதிகாரிகளுக்கே  இது வரை புதிராக இருக்கின்றது.

மதுகமை தேயிலைத் தோட்டமொன்றில் 513 புதிய முச்சக்கர வண்டிகள் தற்போது கண்டு பிடிக்கப் பட்டிருக்கின்றது இது தேர்தல் காலங்களில் தமது அடியாட்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதற்ககாக கொண்டு வரப்பட்டவை என்று நம்பப்படுகின்றது.

தேர்தல் காலங்களில் கடைசி நாட்களில் ராஜபக்ஷவின் தம்பி பசில் ராஜபக்ஷ சமுர்தி நிதியத்திலிருந்து  160 கோடியை சுருட்டி இருக்கின்றார். என்று அந்த நிறுவனத்தில் குற்றம் சாட்டப்படுகின்றது. இன்று பசில் நாட்டிலிருந்து தப்பி ஓடி இருக்கின்றார். அதுவும் முக்கிய பிரமுகர்கள் நுழையும் - விஐபி சிறப்புப் வாயில் ஊடாக. இது பற்றியும் தற்போது அதிகாரிகள் விசாரிக்கப்பட இருக்கின்றார்கள்.

தேர்தல் கூட்டங்களுக்கு ஆட்களை அழைத்து வருவதாக இலங்கை போக்கு வரத்து சபையிலிருந்து பெறப்பட்ட பஸ் வண்டிகளுக்கு 18 கோடி ரூபாய்களை மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் இன்னும் இ.போ.சபைக்கு வழங்க வேண்டி இருக்கின்றது என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றது. ஏற்கெனவே இந்த சபை கடமையாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே இந்த நிறுவனம் திண்டாடிக் கொண்டிருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த விவகாரம். அரச ஊடகங்களில் ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு இதே போன்று பெரும் தொகையான பணம் இன்னும் வழங்கப்படாமல் இருக்கின்றது என்று தெரிகின்றது. இதற்கு அதற்குப் பொறுப்பான  அதிகாரியிடம் கேள்வி கேட்கலாம் என்று தேடிப் பார்த்தால் ஆள் நாட்டிலிருந்து தற்போது தப்பியோடி இருக்கின்றார் என்று கூறப்படுகின்றது.    

ராஜபக்ஷக்களுக்கு சட்ட விரோதமான முறையில் உதவி பண்ணிக் கொண்டிருந்த  அதிகாரிகள் அரசியல்வாதிகள் என்று இதுவரை 80க்கும் மேற்பட்டவர்கள் வெளி நாடுகளுக்குத் தப்பியோடி இருக்கின்றார்கள் அல்லது தலைமறைவாகி இருக்கின்றார்கள். ராஜபக்ஷ அமைச்சரவையில் ஊழல் பண்ணிய 20 அமைச்சர்கள் மற்றும், அவர்கள் புரிந்த ஊழல்கள் தொடர்பான  தகவல்கள் தற்போது நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் இருக்கின்றது. இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் மைத்திரி அமைச்சரவையில் உள்ள இருவரது பெயர்களும் இதில் அடங்கி இருக்கின்றது என்று ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

ராஜபக்ஷவின் புகழ்பாடிக் கொண்டிருந்த அரச ஊடகங்களே இன்று ராஜபக்ஷ கோட்டைக்குள் நடந்த அட்டகசங்கள் பற்றிய பட்டியல்களைத் தப்போது வாசித்துக் கொண்டிருக்கின்றது. புகழ் பாடிய ஊடகங்களே அவரை இன்று தூற்றித் தள்ளுகின்றது.

ராஜபக்ஷ புதல்வர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை இணையத் தளங்கள் அட்டகாசமாக காட்சிப் படுத்திக் கொண்டிருக்கின்றது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக பாராளுமன்ற உறுப்பினரும் ராஜபக்ஷவின் சிரேஸ்ட புதல்வருமான நாமல் ராஜபக்ஷவின் சிபார்சின் பேரில் மாணவி ஒருவருக்குப் பல்கலைக் கழகப் பிரவேசம் வழங்கப்பட்டிருப்பது இலங்கை பல்கலைக் கழகங்கள் வரலாற்றில் ஒரு கரைபடிந்த சம்பவமாக இருந்து வருகின்றது. இது பற்றியும் தற்போது கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது இதுவும் ஆசியாவின் ஒரு ஆச்சர்யம்தான்.

ராஜபக்ஷவின் புதல்வர்கள் பாவித்த விமானங்கள், கார்கள், குதிரைகள், போனிகள் என்று தற்போது கண்டு பிடிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. ஓரிடத்தில் புதிதாக நான்கு போனிக்கள் இருப்பது தொடர்பான தகவல் கிடைத்து. அது எப்படி அங்கு வந்து சேர்ந்தது என்று தேடிப் பார்த்த போது ஜனாதிபதி மாளிகையில் வேலை பார்க்கின்ற ஒருவர் தனக்கு இதனைக் கொண்டு வந்து கொடுத்ததாகவும் தான் அதனை வெறும் 80000 ரூபாய்கள் கொடுத்து கொள்வனவு செய்ததாகவும் அதனை வைத்திருந்தவர் குறிப்பிடுகின்றார். ஒரு முஸ்லிம் ரகர் விளையாட்டு வீரரின் கொலை தொடர்பாகவும் ராஜபக்ஷவின்  புதல்வர் ஒருவர் மீது கை நீட்டப்படுகின்றது. அலரி மாளிகையில் 500 கோடி ரூபாய்கள் வரை பெறுமதியான உள்நாட்டு வெளி நாட்டு நாணயங்கள் விட்டுச் செல்லப்பட்டிருந்தது என்று முன்பு செய்திகள் வெளி வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்குப் புறம்பாகவும் ராஜபக்ஷ கேட்டையின் பாதுகாவலர்களாக இருந்தவர்ககள் தமது பட்டம் பதவிகளைப் பாவித்து சட்ட விரோத நடவடிக்கைகளில் நிறையவே ஈடுபட்டிருக்கின்றார்கள். இதற்கு நல்லதொரு உதாரணம் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச தனது பிறந்த திகதியை மாற்றி கடவுச்சீட்டைப் பெற்றிருக்கின்றார். ஒரு கடவுச் சீட்டில் அவரது பிறந்த திகதி 1967 பெப்பரவாரி 01 என்று குறிப்பிடப்படுகின்றது. இன்னென்றில் இது 1971 பெப்பரவாரி 01 மாற்றப்பட்டு கடவுச் சீட்டுப் பெறப்பட்டிருக்கின்றது. இதே போன்று பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதல்களிலும் மனைவியின் பெயரைத் திட்மிட்டு முன்னுக்குப் பின் முறனாக பதிந்து காரியம் பார்த்திருக்கின்றார்கள் தேசப்பற்றாளர் விமல் வீரவன்ச. 

இந்த மோசடி ஒருவர் சிறைவாசம் செல்வதற்குறிய குற்றமாக இருக்கின்றது. இந்த விடயம் தொடர்பாகவும் தற்போது புலனாய்வுத் துறைக்கு முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இப்படி ஏன் நடந்திருக்கின்றது என்று தேடிப்பார்த்தால் விமல் வீரவன்சவைவிட அவரது மனைவி வயதில் மூத்தவராக (விமல் வீரவங்ச பிறப்பு 1970 மார்ச் ஏழு. மனைவி சசி 1967 பெப்ரவாரி 01) இருப்பதனால் அதனை மூடி மறைக்கவே இந்த சட்டவிரோ தில்லுல்லை அவர்கள் செய்திருக்கின்றார்கள் என்று தெரிய வருகின்றது. ராஜபக கோட்டைக்குள் இது போன்று இன்னும் எத்தனை ஆச்சர்யங்கள் நடந்திருக்கின்றதோ என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

-நஜீப் பின் கபூர்-

0 comments:

Post a Comment