கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சட்டத்தை கையிலெடுக்கும் இனவாதிகளை தடுத்து நிறுத்துங்கள் : மேல்மாகாணசபையில் மனோ கணேசன்

13ஆம் திருத்தத்தின்படி அமைக்கப்பட்டுள்ள இந்த மாகாணசபைக்கு சட்டம், ஒழுங்கு தொடர்பான அதிகாரம் சட்டப்படி இருக்கிறது. முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க நிதி, கல்வி, உள்ளூராட்சி ஆகிய துறைகளுடன் சட்டம், ஒழுங்கு ஆகிய விடயங்களையும் கொண்டாழ்கிறார் என்று அவரது அமைச்சு பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் பற்றிய அதிகாரபூர்வ பிரகடனம் கூறுகிறது. அரசியல் சட்டத்தில் இடமிருந்தாலும், சட்டம், ஒழுங்கு  தொடர்பான அதிகாரங்களை நீங்கள் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துவது இல்லை. அதுபற்றி இங்கே நான் பேசப்போவது இல்லை. இது பற்றி பேசும் சந்தர்ப்பம் எதிர்காலத்தில் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
 
 
பொலிஸ் அதிகாரங்களை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும், சட்டம் ஒழுங்கு தொடர்பான பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது. சட்டம், ஒழுங்கு சீர்குலைவு தொடர்பான கவலை எங்களுக்கு இருக்கிறது. இந்த அதிகாரங்களை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும், அந்த அதிகாரங்களை  பயன்படுத்துகின்றவர்களிடம் இந்த சபையின் கவலையை நீங்கள் கொண்டு செல்ல வேண்டும் என நான் பிரேரிக்கின்றேன். 
சிறுபான்மையினருக்கு எதிராக சட்டத்தை கையில் எடுக்கும் இனவாதிகளை தடுத்து நிறுத்தாமல், ஆளுநர் அலவி மௌலானவின் கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள எந்த ஒரு பொருளாதார அபிவிருத்தி இலக்கையும் அடைய முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
 
மேல்மாகாணசபையில் இன்று ஆளுநரின் கொள்கை பிரகடனம் தொடர்பான விவாதம் நடைபெற்ற போது உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 
 
இந்த நாட்டில் இன்று சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துகொண்டு செயற்படலாம் என ஒரு சாரார் நினைக்கின்றார்கள். அந்த சட்ட விரோத எண்ணத்தை பகிரங்கமாக சொல்கிறார்கள். அமைதியை போதிக்கும் பௌத்தத்தையும், தேசத்தையும் காப்பாற்ற வந்த மகா பலசேனை என தங்களை தாங்களே அறிவித்துகொள்கிறார்கள். சட்டத்துக்கு வெளியில் தாங்கள் ஒரு தனி பொலிஸ் படையை அமைத்து நடத்தலாம் என நினைத்து அதை செயற்படுத்துகிறார்கள். இவை அனைத்தும் மேல்மாகாணத்தில் தான் ஆரம்பித்து முழு நாட்டுக்கும் பரவுகிறது. 
 
அரசியல் யாப்பின்படி சட்டம் ஒழுங்கு பொறுப்புகளை பயன்படுத்தும் அதிகாரம் கொண்ட நீங்கள் அவற்றை  பயன்படுத்துவது இல்லை. ஆனால், இந்தகைய எந்த ஒரு அதிகாரமும் கொண்டிராத சில நபர்கள், சட்டம், ஒழுங்கை கைகளில் எடுத்து கொண்டு தங்கள் சட்டவிரோத நோக்கங்களை பகிரங்கமாக அறிவித்துகொண்டு  பயன்படுத்துகிறார்கள். இது வேடிக்கையா, வினோதமா, பயங்கரவாதமா என்ற தீர்மானத்தை  நீங்களே எடுங்கள். 
 
ஆனால், ஒன்றை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த ஆறாவது மேல்மாகாணசபைக்கான கொள்கை  உரையில் சொல்லப்பட்டு, இன்று இங்கே நீங்கள் பிரேரித்துள்ள நன்றி தெரிவிக்கும் பிரேரணையிலும் சொல்லப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை, இந்த  சட்டம், ஒழுங்கை  சீர்குலைவுகளை சீர் செய்யாமல் ஒருபோதும் அடைய முடியாது.சட்ட ஒழுங்கு சீர்குலைவுடன் பொருளாதார அபிவிருத்தி என்பது ஒரு கனவு மாத்திரமே.
 
பழைய விடயங்களை கடந்து, இந்த ஆறாவது சபை அமைக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்றுள்ள சில சம்பவங்களை நீங்கள் பாருங்கள். மேல்மாகாணத்தின் அழுத்கம நகரில் 10ஆம் திகதி ஒரு வர்த்தக நிறுவனம் எரித்து அழிக்கப்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், இந்த நிறுவனத்தை "எரிப்போம்-உடைப்போம்- அழிப்போம்" என சில மணி நேரத்துக்கு முன்னர் ஒரு கூட்டம் பகிரங்கமாக அந்த வர்த்தக நிறுவனத்துக்கு எதிரே வந்து கூக்குரல் இட்டது. இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், அந்த பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ரோஷன் பெரேராவிடம் நேரிடையாக புகார் செய்து பாதுகாப்பு கோரியுள்ளார்.  ஆனாலும், அன்று இரவு அந்த நிறுவனம் எரிக்கப்பட்டு பலகோடி ரூபாய் பெறுமதியான கட்டிடமும், பொருட்களும் அழிக்கப்பட்டுள்ளன.
 
இதற்கு காரணம் என்ன? அந்த நிறுவனத்துக்கு வாடிக்கையாளராக வந்த ஒரு பெண்ணிடம் அந்த நிறுவனத்தை  சார்ந்த ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்டார் என்பதாகும். இது போலிஸ் புகாராகும். இது பற்றி போலிஸ் விசாரணை நடந்தது. நீதிமன்றம் சென்றது. அதற்குதான் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவேண்டிய போலிசார் உள்ளனர். எவரும் தவறு செய்திருந்தால் அவருக்கு தண்டனையை நீதிமன்றம் மூலம் பெற்று தருவது அவர்களது கடமை.
 
ஆனால், குறிப்பட்ட நிறுவனம் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒரு வர்த்தகருக்கு சொந்தமானது என்றவுடன் நான் மேலே சொன்ன கூட்டம் சட்டத்தை கைகளில் எடுத்துகொண்டு ஊர்வலம் வந்து தீ வைத்துள்ளது. இதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்? அந்த நிறுவனத்துக்கு சொந்தகாரரை எனக்கு தெரியாது.  ஆனால், அவர் நடைபாதை வியாபாரியாக தொழிலை ஆரம்பித்து, உழைப்பின்  மூலம் முன்னேறியவர் என்று அறிந்துள்ளேன். அவரது வளர்ச்சி மீது பொறாமை கொண்டுள்ள நபர்கள் இந்த சம்பவத்தை காரணமாக கொண்டு அவரது நிறுவனத்தை அழித்துள்ளனர். இது அப்பட்டமான இனவாதம். அப்பட்டமான மதவாதம். அப்பட்டமான தீவிரவாதம். இதில் இரண்டு கருத்துகளுக்கு இடமில்லை. 
 
இதில் இன்னொரு விசேடம் என்னவென்றால், இதே கட்டிடத்தில் 1980 களில் ஒரு தமிழர் ஒரு வர்த்தக நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வந்ததாகவும், அந்த நிறுவனமும் 1983 இனக்கலவரத்தின் போது எரிக்கப்பட்டதாகவும் நான் அறிகிறேன்.  1983ம் வருட கருப்பு ஜூலை கலவரத்தின் பிறகு இந்த நாடு தேசிய ரீதியாகவும், சர்வதேசரீதியாகவும் கண்ட அனுபவங்களை நாம் மறக்க முடியுமா? 
 
அந்த பாதிப்புகளில் இருந்து நாம் இன்னமும் மீளவில்லை என்பது உண்மை. இன்று சர்வதேசத்துடன் ஒரு நாடு என்ற நிலையில் நாம் பெரும் கண்டனங்களை எதிர்கொள்கிறோம். இன்று நமது நாடு, ஐநா மனித உரிமை பேரவையில் பிரசித்தமான ஒரு நாடாக மாறியுள்ளது. அடுத்த சில வாரங்களில் நமது நாடு தொடர்பான ஒரு விசாரணை ஆணைகுழுவின் அங்கத்தவர்களின் பெயர் பட்டியல்அறிவிக்கப்பட உள்ளது. ஒரு நாடு என்ற  முறையில் இந்த சர்வதேச கண்டனம், துர்பாக்கியமானது. ஆனால், இவை தானாக வரவில்லை. இவற்றை நாம் கேட்டு பெற்றுக்கொண்டுள்ளோம்.  இந்த நாட்டில் சிங்களம் பேசும் மக்களும், தமிழ் பேசும் மக்களும், பௌத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மக்கள் வாழ்கிறார்கள் என்பதையும், நாம் அனைவரும் சம உரிமை கொண்ட இலங்கையர்கள் என்பதையும் நாம் மறந்து விட்டோம்.
 
இவை அனைத்துக்கும் ஆரம்பம், இந்த நாட்டில் நடைபெற்ற இனக்கலவரங்கள்தான். சட்டம் ஒழுங்கு சீர்குலைவுகள்தான். இவை அனைத்தும் பெரும்பாலும் மேல்மாகாணசபை நிலபரப்புக்குள்தான் ஆரம்பிகின்றன. ஆகவே  போலிஸ் அதிகாரங்களை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும், சட்டம் ஒழுங்கு தொடர்பான பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது. சட்டம், ஒழுங்கு சீர்குலைவு தொடர்பான கவலை எங்களுக்கு இருக்கிறது. இந்த அதிகாரங்களை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும், அந்த அதிகாரங்களை  பயன்படுத்துகின்றவர்களிடம் இந்த சபையின் கவலையை நீங்கள் கொண்டு செல்ல வேண்டும் என நான் பிரேரிக்கின்றேன்.

0 comments:

Post a Comment