கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

யாழ் முஸ்லிம் இணைய ஆசிரியர் நலம் பெற பிரார்த்திப்போம்



 கடந்த மூன்று வருடங்களாக யாழ் முஸ்லிம் இணையத்தளத்தை தனியொரு மனிதனாக நடாத்திவந்த ஊடகவியலாளர் ஜனாப் முஹம்மத் அன்சீர் அவர்கள் தொடர்ச்சியான உடல், மன உளைச்சல் காரணமாக பாதிக்கப் பட்டு, மருத்துவமனைக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.
யாழ்ப்பாணம் சொனகதேருவில் 1979 ஆம் ஆண்டு, ஒரு கற்ற குடும்பத்தில் பிறந்த அன்சீர் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியிலும், உயர்கல்வியை நீர்கொழும்பு விஜயரட்னம் இந்துக் கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார்.
தினக்குரல் பத்திரிகையில் காரியாலய உதவியாளராக தனது ஊடகத்துறை வாழ்க்கையை ஆரம்பித்த அன்சீர் அவர்கள், அதே பத்திரிகையின் பாராளுமன்ற செய்தியாளராகவும் கடமையாற்றினார். நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக குடும்பத்துடன் சுவிட்சர்லாந்தில் குடியேறிய அன்சீர் அவர்கள், பல்வேறு வழிகளிலும் தனது ஊடக முயற்சிகளை, தொடர்புகளைப் பேணி வந்தார்.
தனது ஊடக வாழ்க்கையின் முக்கிய மைல்கல்லாக 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி யாழ் முஸ்லிம் இணையத்தளத்தை ஆரம்பித்த அன்சீர் அவர்கள், அன்று முதல் அவ்விணையத்தளத்தை தனி நபராக, கண்ணும் கருத்துமாக, தனது குழந்தையைப் போன்று கருதி இயக்கி வந்தார்.
செய்திகளை சிறப்பாக தர வேண்டும் என்கின்ற இயல்பான ஆர்வம் காரணமாக ஊண் உறக்கத்தைக் கூட மறந்து மணிக்கணக்கில், ஏன் நாட்கணக்கில் கூட தனது மடிக் கணனியுடன் மெய் மறந்து லயித்து விடுபவராக அவர் காணப்பட்டார். அதிகமான நாட்களில் அவர் காலை உணவை உட்கொள்ளும் பொழுது, நேரம் இரவு 8.00 மணியையும் தாண்டியிருக்கும், அப்படி ஒரு ஈடுபாடு அவருக்கு யாழ் முஸ்லிம் மீதும், ஊடகத்துறை மீதும் காணப்பட்டது.
தொடர்ந்தும் இவ்வாறு தனிநபராக ஓய்வின்றி செயற்பட்டு வந்ததன் காரணமாகவும், பல்வேறு பட்ட விதத்திலும் அவரை நோக்கி முன்வைக்கப் பட்ட நேர்மையற்ற விமர்சனங்கள் சவால்கள் காரணமாகவும், உடல், உள உளைச்சலுக்கு உள்ளான நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப் படி கட்டாயமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு அவர் ஆளாகியுள்ளார்.
கடந்த மாதம் சிகிச்சை பெற்று மருத்துவ மனையிலிருந்து வெளியேறிய நிலையிலும் தொடர்ச்சியாக அவர் சுகவீனமுற்று வந்த நிலையில். கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி ஜெனீவாவில் அமைந்துள்ள University Hospital இல் அனுமதிக்கப் பட்டு, அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார். உடகவியலாளர் ஜனாப் முஹம்மத் அன்சீர் அவர்களின் உடல், உள ஆரோக்கியத்திற்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.
நன்றி
காஞ்சனா சிவராம்
(காஞ்சனா அன்சீர்)

0 comments:

Post a Comment